உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடுமலை கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 110 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பிரியங்கா, ஆதிஷா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி, ஒருங்கிணைப்பாளர் சந்தியா, ஆசிரியர்கள் சசிகலா, தங்கராஜ் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மாணவர்களுக்கு பொக்கிஷம் பள்ளி முதல்வர் சாரதாமணி தேவி கூறுகையில், ''- 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் கல்வி கருவியாக இருக்கிறது. இதில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகள் மற்றும் கணிதம் தொடர்பான செய்திகள் அனைத்தும் மாணவர்களின் அறிவை விரிவாக்கும் விதமாக அமைந்துள்ளன. பட்டம்' இதழில் உள்ள வினாடி வினா, புதிர், அறிவியல் செய்திகள் மற்றும் மாணவர் சாதனைகள் போன்ற பகுதிகள், குழந்தைகளின் சிந்தனை திறனை அதிகரித்து, ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கின்றன. மொத்தத்தில், 'பட்டம்' இதழ் மாணவர்களை அறிவிலும் ஆற்றலிலும் முன்னேற்றும் சிறந்த துணை ஆகும். இது மாணவர்களின் தமிழ் மொழி அறிவையும், வாசிப்பு பழக்கத்தையும் மேம்படுத்துகிறது. 'பட்டம்' இதழ் வாசிப்பது ஒவ்வொரு மாணவருக்கும் அறிவுச் சிறகுகளைத் திறந்து வைக்கும் பொக்கிஷம் என கூறலாம்,” என்றார்.

வாசிப்பு திறன் மேம்படும்!

மாணவி பிரியங்கா: 'பட்டம்' இதழ் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. அதில் வரும் அறிவியல் செய்திகள், பொது அறிவு, புதிர் பகுதிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த இதழ் படிப்பதால் புதிய தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் தமிழ் மொழியையும் நன்றாகப் புரிந்து கொண்டு எழுத கற்றுக் கொடுக்கிறது. மாணவி ஆதிரை: 'பட்டம்' இதழ் எனக்கு நண்பனைப் போல. தினமும் புதுசு புதுசாகக் கற்றுக் கொள்ள உதவுகிறது. நாட்டிலும் உலகிலும் நடக்கும் நிகழ்வுகளை எளிமையாகப் புரியச் செய்கிறது. இது என் எழுத்துத் திறனை மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி