பல்லடம் - அவிநாசி பஸ் வசதி வேண்டும்! மங்கலம் மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பூர் : பல்லடம் - மங்கலம் - அவிநாசி இடையேயான பகுதிகளை இணைக்கும் வகையில், புதிய பஸ் இயக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மிக அருகே இருக்கும் மங்கலம் பகுதி, பல்லடம், அவிநாசி, திருப்பூர் மற்றும் சோமனுார் பகுதிகளுக்கு மையத்தில் அமைந்துள்ளது. சோமனுார் - திருப்பூர் வழியாக மட்டுமே பஸ் வசதி உள்ளது. அவிநாசியில் இருந்து, மங்கலம் வழியாக பல்லடம் வரை பஸ் வசதியில்லை. சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வஞ்சிபாளையம் ரயில்ரோடு, நொய்யல் பாலம், கவுசிகா நதி பாலம் வசதியில்லாததால், கடந்த பல ஆண்டுகளாக பஸ் வசதி செய்யப்படவில்லை. தற்போது, அனைத்து இடங்களிலும் பாலம் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மங்கலம் வழியாக, பல்லடத்தில் இருந்து அவிநாசி வரை பஸ் இயக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'இவ்வளவு வசதிகள் வந்த பிறகும், மங்கலம் சுற்றுப்பகுதி மக்கள், பல்லடம் அல்லது அவிநாசி செல்ல, திருப்பூர் சென்று, பஸ் மாறி சென்றுவர வேண்டியுள்ளது. புதிய டவுன் பஸ் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். பல கிராமங்கள் பஸ் வசதியில்லாத கிராமங்களாக இருக்கின்றன. தற்போது, ஏராளமான மினி பஸ் வழித்தடங்களை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில், பல்லடம் முதல், மங்கலம் வரையிலும், மங்கலம் முதல் அவிநாசி வரையிலும், மினி பஸ்களையாவது இயக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்,' என்றனர்.