உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் ரயில் இயக்க பயணியர் வேண்டுகோள்

கூடுதல் ரயில் இயக்க பயணியர் வேண்டுகோள்

உடுமலை; உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர். கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலை பகுதியிலுள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், வட மாநிலங்களைச்சேர்ந்தவர்களும், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பெரும்பாலும் ரயிலில் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது இயக்கப்படும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் பல முறை ரயில்வேக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !