புதிய புறவழிச்சாலை திட்டம் அளவீடு செய்ய அனுமதியோம்
பல்லடத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், புதிய புறவழிச் சாலை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்லடம் பகுதி பொதுமக்கள், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், பல்லடம் வந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் அஞ்சலியை சந்தித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துமாறு வலியுறுத்தினர். நேற்று, கோவை சென்ற பொதுமக்கள் பலர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளரை சந்தித்தும் மனு அளித்ததோடு, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தனை சந்தித்தும் முறையிட்டனர். 'கையக நிலங்கள்
மதிப்பு பூஜ்ஜியம்'
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 2018ம் ஆண்டு, காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூரை இணைக்கும் வகையிலான புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு நில அளவீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அன்றிலிருந்து, கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாகவே உள்ளது. மேலும், பழைய திட்டத்தை யாருமே எதற்காக நிலையில், எதற்காக அதை செயல்படுத்தாமல், புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. புதிய புறவழிச்சாலை திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். எதிர்ப்பை மீறி, இதை செயல்படுத்த விரும்பினால், அளவீடு பணிகளை அனுமதிக்க மாட்டோம்'' என்றனர். எம்.எல்.ஏ., உறுதி
பொதுமக்களிடம் பேசிய எம்.எல்.ஏ., ஆனந்தன், 'இது குறித்து அதிகாரிகளிடம் நானும் பேசுகிறேன். எதிர்ப்பை மீறி புதிய திட்டத்தை செயல்படுத்த நினைத்தால், உங்களுடன் நானும் போராட்டத்தில் இருப்பேன்' என்றார். --- புதிய புறவழிச்சாலை திட்டத்தால் பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கூறி, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தனை சந்தித்து முறையிட்ட பொதுமக்கள். தற்போது, புதிய புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது. புதிய திட்டத்தால், 40க்கும் மேற்பட்ட கிணறுகள், 25க்கும் அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன. பல்லடம் நகரை ஒட்டியே இந்த புறவழிச்சாலை அமைவதால், பெரிய அளவு பயனுள்ளதாகவும் இருக்காது. - பல்லடம் பகுதி பொதுமக்கள்.