உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரத்துப்பாளையம் அணைக்கு புத்துயிர் 2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

ஒரத்துப்பாளையம் அணைக்கு புத்துயிர் 2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

திருப்பூர் : ஒரத்துப்பாளையம் அணை பகுதிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 2ம் கட்டமாக நேற்று, 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில், கடந்த, 10 ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டம் முழுவதும்21 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. திருப்பூர் சாயக்கழிவுநீரால் ஒரத்துப்பாளையம் அணை பாதிக்கப்பட்டிருந்தது.அணை பகுதியில், திருப்பூர் மாவட்டத்தில், 600 ஏக்கர்; ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட, 400 ஏக்கர் என, 1000 ஏக்கர் பரப்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், காங்கயம் துளிகள் அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு வளர்க்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.முதல்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பில், 4,500 மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது; சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஒரத்துப்பாளையம் அணை, தங்கம்மன் கோவில் அருகே, நேற்று 2ம் கட்டமாக மரக்கன்றுநடும் விழா நடந்தது. மொத்தம், 20 ஏக்கர் பரப்பில், 2,000 மரக்கன்றுகள் நடும் பணிதுவக்கி வைக்கப்பட்டது.வழக்கமாக, தென்மேற்கு பருவம் துவங்கும் காலகட்டத்தில், மரக்கன்று நடும் பணி துவங்கப்படும். தற்போது, கோடைமழை பெய்து குளிர்ச்சியாக காணப்படுவதால், முன்கூட்டியே மரக்கன்றுநடும் விழா நடத்தப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், காங்கயம் துளிகள் அமைப்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தம்மரெட்டிபாளையம் ஊராட்சி, மறவபாளையம் ஊராட்சி, தங்கம்மன் கோவில் நிர்வாகம், ஈரோடு சிறகுகள், வெள்ளகோவில் நிழல்கள், 'டிரீம் -20'பசுமை அமைப்பு, வேர்கள் அமைப்பு மற்றும் களம் அறக்கட்டளை, மழை உடுமலை ஆகிய அமைப்புகளை சேர்ந்த பசுமை ஆர்வலர்கள், மரக்கன்றுகளை நட்டனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு நிர்வாகிகள் கூறுகையில், 'ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் மரக்கன்று நட்டு வளர்ப்பது, கனவு திட்டமாக இருந்தது; தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது; இது, திருப்பூர் இயற்கை வரலாற்றில் புதிய அத்தியாயம்.ஒரு தலைமுறையினர் செய்த பிழையை, நமது தலைமுறையில் திருத்தம் செய்வதற்கான வாய்ப்பாகவே, திட்டத்தை பார்க்கிறோம்.தங்கம்மன் கோவில் பகுதிதான், 'ஜீரோ பாயின்ட்'; அணை நிரம்பி இருக்கும் போது, கோவில் வரை தண்ணீர் தேங்கும்; அதற்காக, 2வது கட்டமாக, கோவில் அருகே, 2,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி துவங்கியுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ