முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு! 2 நாளாக தொடர்ந்த போராட்டம்
திருப்பூர்; 'திருப்பூர், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்டக்கூடாது; கொட்டப்பட்ட குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் இரு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில், தினமும், 700 முதல், 800 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றை அப்புறப்படுத்தி சேகரித்து வைக்கவும், மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து அகற்றவும் இடமில்லாததால், கடந்த, பல ஆண்டுகளாக காலாவதியான பாறைக்குழிகளை தேடிப்பிடித்து மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருகிறது. முதலிபாளையம் பாறைக்குழியில், கடந்த, 2015ல் இருந்து, 2021 வரை மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டியது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அங்கு குப்பை கொட்டுவது தவிர்க்கப்பட்டது. சில ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் அங்கு குப்பைக்கழிவு கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடியவிடிய போராட்டம்
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு நடத்த திட்டமிட்ட நிலையில், பெரிச்சிபாளையத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு உண்ணாவிரதம் இருந்த அவர்கள், விடியவிடிய தர்ணாவிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மதியம், மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் மனீஷ் நாரணவரே ஆகியோரை சந்தித்து, கோரிக்கையை முன்வைத்தனர். அதிகாரிகளின் விளக்கம் திருப்தியளிக்காத நிலையில், குப்பைக் கொட்டும் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண, அவர்கள் தயக்கம் காட்டுவதாக கூறி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, மீண்டும் திருமண மண்டபத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.
நீர், நிலம், காற்று மாசு உறுதியானது!
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை, கழிவுநீர் சேர்ந்து, நிலத்தடி நீரை முழுமையாக கெடுத்துவிட்டது. தனியார் ஆய்வகம் வாயிலாக மேற்கொண்ட ஆய்வக பரிசோதனையில், டி.டி.எஸ்., அளவு, ஒரு லிட்டரில், 13 ஆயிரம் மி.கிராம் கடந்திருக்கிறது; அனைத்து அமிலங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நிலம், நீர், காற்று என அனைத்தும் பெரும் மாசடைந்திருக்கிறது. இத்தகைய மாசுபாட்டை, தனியார் செய்திருந்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், பெரும் மாசு ஏற்பட அரசே காரணமாக இருப்பது, துரதிருஷ்டவசமானது. கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். - வேலுசாமி பி.ஏ.பி., கிளைக்கால்வாய் பாதுகாப்பு சங்கம் தலைவர்
சட்டப்போராட்டம் தொடரும்
பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனரிடம் பேச்சு நடத்தினோம். 'பாறைக்குழியில் தான் குப்பைக் கொட்டியாக வேண்டும்; வேறு வழியில்லை' என்ற நிலைபாடில் அவர்கள் உறுதியாக உள்ளனர். மாறாக, அறிவியல் பூர்வமாக குப்பையை கையாள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. முதலிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக அது மாறியிருக்கிறது. இது, குறிப்பிட்ட ஒரு பகுதி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த திருப்பூருக்குமான பிரச்னை. இப்பிரச்னைக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காணும் வரை எங்களின் சட்டப்போராட்டம் தொடரும். - சதீஷ்குமார், மாநில செயலர்சட்டப்பிரிவு, தமிழக விவசாயிகள் சங்கம்