துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உடுமலை: உடுமலையில் துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. உடுமலையில் துாய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, துணைத்தலைவர் கனிமொழி, தி.மு.க., நகரச்செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தாட்கோ துாய்மை பணியாளர் நல சங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சி பணியாளர்களுக்கு, 7.50 லட்சம் கடனுதவி மற்றும் துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனியார் வசம் துாய்மைப்பணிகள் வழங்காமல், நேரடியாக நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், மூன்று வேளையும் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.