ரப்பர், நுால் வரத்து குறைந்தது எலாஸ்டிக் விலை உயர்ந்தது
திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, எலாஸ்டிக் விலை 15 சதவீத உயர்த்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, வளை குடா நாடுகளிலிருந்து காஸ் சிலிண்டர் வரத்து தடைபடுகிறது. இதனால், மூலப்பொருட்கள், காஸ் கிடைப்பதில் சிக்கல் மற்றும் கிடுகிடு விலை உயர்வால், எலாஸ்டிக் விலை நேற்றுமுதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது: போர் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், காஸ் வரத்து தடைபட்டுள்ளது. இதனால், ஓவன் எலாஸ்டிக்கை 'ஹீட் ட்ரீட்மென்ட்' என்ற பினிஷிங் செய்ய முடிவதில்லை. மூலப்பொருட்களான ரப்பர் மற்றும் பாலியெஸ்டர் நுால் விலையும் தொடர்ந்து உயர்த்து கொண்டே செல்கிறது. கடந்த, 10 நாளில் பாலியெஸ்டர் நுால் கிலோவுக்கு 25, ரப்பர் கிலோவுக்கு, 40 ரூபாயும் விலை உயர்ந்துள்ளன. வடமாநிலங்களிலிருந்து சாயமேற்றப்பட்ட நுால் வரத்து குறைந்துள்ளது; விலையையும், கிலோவுக்கு 40 ரூபாய் வரை உயர்த்திவிட்டனர். அதனால், ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர் மீதான எலாஸ்டிக் தயாரிப்பு என்பது, லாபம் இழப்பையும் கடந்து நஷ்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நெருக்கடியான இச்சூழலை சமாளிக்க, எலாஸ்டிக் விலை, 15 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.