சிறு தானிய விளைச்சலை அதிகரிக்க திட்டம்; விவசாயிகளுக்கு பயிற்சி
திருப்பூர் : திருப்பூர் அருகே ஊத்துக்குளி வட்டாரத்தில், 100 விவசாயிகளின் தோட்டங்களில், செயல் விளக்கல் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.செயல் விளக்கத்திடல்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, ஊரக தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை ஊத்துக்குளி வட்டம், வட்டாலபதி கிராமத்தில் நடந்தது.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது;திருப்பூர் மாவட்டத்தில், 24,700 ஏக்கர் பரப்பளவில் நெல்; 1.48 லட்சம் ஏக்கரில் தானியம்; 49,400 ஏக்கரில் பயறு; 24,700 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சோளம் மட்டும், 91 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், 'தானிய மகசூல் குறைவாகவே கிடைக்கிறது' என்கின்றனர் வேளாண் துறையினர்.எனவே, சோளம் மகசூலை அதிகரிக்க புதிய ரக சோளம் 'கோ 2' மற்றும் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றை நாம் தினமும், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இதன் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியம் மேம்படும்.திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவில் பயிரிடப்படும் சோளம், கம்பு விளைச்சலை அதிகரிக்க, இத்திட்டத்தின் வாயிலாக, உயர் விளைச்சல் ரக விதைகள் உற்பத்தி, வினியோகத்திற்கான மானியம், செயல் விளக்க திடல்கள், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், உயிரியல் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி ஆகிய இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக சோளம் விளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் கவிதா, சிவஞானமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.