மேலும் செய்திகள்
மூத்தோர் தடகள போட்டி: வலிமை காட்டிய வீரர்கள்
06-Oct-2025
பல்லடம்: மூத்தோர் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 16ம் ஆண்டு தடகளப் போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதில், பல்லடம் வட்டாரத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவு நடைப்போட்டி, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தடை தாண்டுதல், நீளம் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், தங்கராஜ் வேலுசாமி, திருமூர்த்தி, கண்ணன், குட்டி பழனிசாமி, பாலகிருஷ்ணன், ஷேக் மக்துாம், கணேஷ், செல்வகுமார், சக்திவேல், கங்காதரன், சுரேஷ்குமார், மணிவண்ணன், வீரமணி, செல்வம், சதீஷ்குமார், அஸ்வின் குமார், சக்திவேல் மற்றும் மாரிமுத்து ஆகியோர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்கள் பிரிவுக்கான போட்டிகளில், பத்மாவதி, நாகரத்தினம், லதா, விஜயலட்சுமி, ரேணுகாதேவி ஆகியோர், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ரோட்டரி சங்க பட்டய தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நண்பர்கள் கால்பந்து குழு நிர்வாகி திருமூர்த்தி வரவேற்றார். பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் நடராஜன் குமரன் டெக்ஸ் உரிமையாளர் பரமசிவம் மற்றும் மூத்த வீரர்கள் தங்கராஜ், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
06-Oct-2025