தள்ளாடும் உலர் களங்கள்; உரிமையாளர்கள் கவலை
பொங்கலுார்: கொப்பரை தயாரிக்கும் உலர் களங்கள் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் செயல்படுகின்றன.விளைச்சல் சரிவால் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. உற்பத்தியாகும் தேங்காயில் பெரும் பகுதி உணவுத் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. எனவே, உலர் களங்களுக்குப் போதுமான அளவு தேங்காய் கிடைப்பதில்லை. இதனால், உலர்கள உரிமையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏராளமான உலர்கள உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். மீதமுள்ள உலர் களங்களும் குறைந்த தொழிலாளருடன் வேைல செய்கின்றனர். இது குறித்து உலர்கள உரிமையாளர்கள் கூறுகையில், 'தேங்காயின் அளவு சிறுத்துப் போனதால் கொப்பரை எடை குறைந்து விடுகிறது. 25 ரூபாய் கொடுத்து தேங்காய் வாங்குகிறோம். உரிமட்டை, 2.50, தொட்டி மூன்று ரூபாய்க்கும் விற்கிறது. நல்ல விலை கிடைக்காவிட்டால் தொழில் நடத்த முடியாது,' என்றனர்.