கரடுமுரடு சாலைகள் சிம்மபுரி தவிக்கிறது
பல்லடம்; ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சிம்மபுரி பகுதி மக்கள், அடிப்படை வசதி குறைபாடு காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மக்கள் கூறுகையில், 'சிம்மபுரி டவுன் பகுதியில் உள்ள வீதிகள் அனைத்திலும் ரோடு வசதி கிடையாது. அனைத்தும் மண் தடமாகவும், ஜல்லி கற்கள் சிதறியும் உள்ளன. இதன் காரணமாக, வாகனங்களில் தள்ளாடியபடி தான் செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் வீதிகள் சேரும் சகதியுமாக மாறி விடுகின்றன.வீதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறது. சாலை, தெரு விளக்கு மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.