திருப்பூர்;'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மத்திய ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ள நிலையில், குப்பைகளை தீயிட்டு கொளுத்தும் செயல் பல இடங்களில் நடக்கிறது; கோடை வெயில் சுட்டெரிக்கும் இச்சமயத்தில், இது, வீபரீதத்தை ஏற்படுத்தும்.கிராம, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வீடு, கடைகள் தோறும், உள்ளாட்சி துாய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து, அவற்றை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக தரம் பிரித்து, மட்காத குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க வேண்டும். மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் விதிமுறையும் இதுதான்.ஆனால், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், குப்பைகளை கொட்டவோ, தரம் பிரித்து, மேலாண்மை பணி செய்யவோ இடமில்லாத நிலையில், ரோட்டோரங்களில் குப்பைக் கொட்டப்பட்டு, எரியூட்டப்படுகிறது. இதனால், புகைமாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.சமீபத்தில், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துாய்மைப்பணிகளின் நிலை குறித்து, மத்தியக் குழுவினர் ஆராய்ந்தறிந்து சென்றனர். 'மத்திய அரசின் திட்டங்கள் சரிவர மேற்கொள்ளப்படுகிறது' என, ஊரக முகமை திட்ட அதிகாரிகளும் சமாளித்தனர்.இதற்கிடையில், திருப்பூர் அருகே கணியாம்பூண்டி பகுதியில், பல இடங்களில் ரோட்டோரங்களில் குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது; இதனால், புகைமாசு ஏற்படுகிறது. இதுபோன்று பல இடங்களில் நிகழ்கிறது' என, கணியாம்பூண்டி ஊராட்சி வளர்ச்சிக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.--கணியாம்பூண்டி பகுதியில் சாலையோரம் தீயிட்டு கொளுத்தப்படும் குப்பை.
தீ விபத்துக்கு வித்திடும்!'தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இதுபோன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்துவது போன்ற செயல்களால், தீ பரவி அருகேயுள்ள முட்புதர், செடி கொடிகளில் பரவும்; இது, பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்' என, வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.