உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் துவக்கம்! வீடு தேடி வரும் விண்ணப்ப படிவங்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் துவக்கம்! வீடு தேடி வரும் விண்ணப்ப படிவங்கள்

உடுமலை: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கியுள்ளன. மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். தாசில்தார் குணசேகரன், தேர்தல் பிரிவு தாசில்தார் விஷ்ணு கண்ணன் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். இதில், சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து, அரசியல் கட்சியினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதே போல், உடுமலை சட்ட சபை தொகுதிக்கான அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுச்சாவடிகள் வாரியாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,); பத்து பி.எல்.ஓ.,க்களுக்கு ஒருவர் வீதம் என மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1951 முதல் 2004 வரை, மொத்தம் எட்டு முறை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2002 - 04 காலகட்டத்தில், அதாவது 21 ஆண்டுகளுக்கு முன், தீவிர திருத்தம் நடைபெற்றது. அதன்பின், நடப்பாண்டு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இறந்த வாக்காளர் பட்டியலில் தொடர்வது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் தவறாக சேர்க்கப்பட்டது, இரட்டைப்பதிவு வாக்காளர் ஆகியவற்றை களைவதற்கு இந்த, தீவிர திருத்தம் அவசியமாகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா ஒருவர் வீதம் பி.எல்.ஓ., க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து பெறுவர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு நகல் படிவங்கள் வழங்கப்படும். ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,விடம் கொடுக்கவேண்டும். மற்றொரு நகலை, ஒப்புகைச்சீட்டாக வாக்காளரே வைத்துக்கொள்ளலாம். கணக்கெடுப்பில் படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். பிப். 7ல் இறுதிப்பட்டியல் வரும் நவ. 3ம் தேதிக்குள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்கள் அச்சிடுதல், பி.எல்.ஓ.,க்கள் உள்பட தேர்தல் பிரிவினருக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் நிறைவடையும். நவ. 4 முதல், டிச. 4ம் தேதி வரை, பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர் வீடு தேடிச்சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்குவர்; பூர்த்தி செய்த படிவங்களை, வாக்காளர்களிடமிருந்து பெறுவர். டிச. 9ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். ஜன. 8ம் தேதி வரை, விடுபட்டவர்கள் பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஜன. 31 ம் தேதி வரை, சரிபார்ப்பு மற்றும் விசாரணைகள் நடைபெறும். பிப். 7ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு நகல் படிவங்கள் வழங்கப்படும். ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,விடம் கொடுக்கவேண்டும். மற்றொரு நகலை, ஒப்புகைச்சீட்டாக வாக்காளரே வைத்துக்கொள்ளலாம். கணக்கெடுப்பில் படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை