உங்களுடன் ஸ்டாலின் முகாம்; பொதுமக்கள் வாக்குவாதம்
பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. பட்டா மாறுதல், ஓ.ஏ.பி., உட்பட பல கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு கொடுத்தனர். காலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு வந்தவை. சிலர் வேறு ஊராட்சிகளில் இருந்தும் மனு கொடுக்க வந்திருந்தனர். ரோட்டில் இருந்து அரசு பள்ளி வரை தி.மு.க.,வினர் ஏராளமான கொடிகளை நட்டு வைத்திருந்தனர். இதனால் அங்கு வந்த பொதுமக்களில் சிலர் இது அரசு விழாவா கட்சி விழாவா என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தனர்.