அறிவியல் தேர்வு எளிமை; மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர்; பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால், தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தகுதியான, 29 ஆயிரத்து, 887 மாணவ, மாணவியரில், 29 ஆயிரத்து, 451 பேர் தேர்வெழுதினர்; 436 பேர் தேர்வறைக்கு வரவில்லை. 710 தனித்தேர்வர்களில், 616 பேர் தேர்வெழுதினர்.மாணவ, மாணவியர் பேட்டிகிருத்திகா:கட்டாய வினாவுக்கு சற்று யோசித்து விடை எழுத வேண்டியிருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர் 'முக்கியம்' என கூறியிருந்த கேள்விகள், அனைத்தும் வந்திருந்தது. அறிவியலில் கூடுதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும்.விகாஷினி:கடினமாக கேட்கப்படுமென எதிர்பார்த்த வினாக்கள் எளிமையாகத்தான் இருந்தது. வரைபடம் கேள்வி, கட்டாய வினாவில் தெரிந்த கேள்விகளே இடம் பெற்றது; யோசித்து விடை எழுதினேன். வகுப்பறையில் நடத்தப்படும் தேர்வுகளை போல் வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது.தட்சணாமூர்த்தி:பாடங்களுக்கு பின்புறமுள்ள, மாதிரித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் தெரிந்தவையாக இருந்ததால், சீக்கிரமாக விடைஎழுத முடிந்தது. கட்டாய வினா எளிமையாக இருந்தது. நிச்சயம், 85க்கு மேல் மதிப்பெண்களை பெற முடியும்.விக்னேஸ்வரன்:ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் கிடைக்கும். இரண்டு, மூன்று மதிப்பெண் அனைத்தும் முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் தான் அப்படியே வந்திருந்தது. கட்டாய வினா சற்று யோசிக்க வைத்தாலும், விடையளிக்கும் வகையிலான வினாவாகத்தான் இருந்தது.
'சென்டம்' அதிகரிக்கும்
வினாத்தாள் எளிமையாக இருந்தது; மெல்ல கற்கும் மாணவரும் கட்டாயம் தேர்ச்சி அடைவர். நான்கு மதிப்பெண்ணில் (வினா எண் 32) கட்டாய வினாவுக்கு, யோசித்து சரியாக விடை எழுதியவர்கள் சென்டம் பெற வாய்ப்புள்ளது. கடந்தாண்டு அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததால், ஒரு வித பயத்துடன் மாணவ, மாணவியர் தேர்வெழுத சென்றிருப்பர். நடப்பாண்டு வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், அறிவியலில் தேர்ச்சி சதவீதமும், சென்டமும் நம் மாவட்டத்தில் அதிகரிக்கும்.- வீரபத்திரன், அறிவியல் ஆசிரியர், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி.