வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் தவிப்பு; தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் அவலம்
உடுமலை; உடுமலை அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், வகுப்பறை பற்றாக்குறை குறித்து கல்வித்துறை அலட்சியமாக இருப்பதால், மாணவர்கள் இடநெருக்கடியில் தவிக்கின்றனர்.உடுமலை அமராவதிநகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, 102 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி நடுநிலையாக இருந்து, கடந்த 2008ம் ஆண்டில் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், இன்னும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. நுாலகம், ஆய்வகம் என இதர வசதிகள் எதுவும் இல்லை. இப்பள்ளி, பெயரில் மட்டுமே உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு போதியளவு வகுப்பறைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது, துவக்கம் மற்றும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. இப்பள்ளி பலமுறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.கல்வித்தரத்தில் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையிலும், மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை அலட்சியமாக உள்ளது.பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்பு, புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு, அமராவதிநகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.அவ்விடத்தை கல்வித்துறையில் ஒப்படைப்பதில், பொதுப்பணித்துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. கல்வித்துறையும் அவ்விடத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மேலாண்மைக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்தில் இது தொடர்பாக மனு அளித்துள்ளனர்.கல்வித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், மாணவர்கள் வகுப்பறை பற்றாக்குறையால் இடநெருக்கடியில் தவிக்கின்றனர்.சிறந்த கல்வி இருந்தும், மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பெற்றோரும் அதிருப்தியில் உள்ளனர். மழை நாட்களில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களின் நிலை மேலும் மோசமாகிறது.கட்டமைப்பை மேம்படுத்த கல்வித்துறை அலட்சியம் காட்டுவதால், நாளடைவில் மாணவர் எண்ணிக்கை சரிவும் ஏற்படும் சூழல் உள்ளது.இப்பிரச்னை குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.