உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரும்பு சாகுபடி குறைந்தது; வெல்லம் உற்பத்தி பாதிப்பு

கரும்பு சாகுபடி குறைந்தது; வெல்லம் உற்பத்தி பாதிப்பு

திருப்பூர் : கரும்பு சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இரு ஆண்டு களாக மூடப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது.அமராவதி அணை பாசனம் மற்றும் திருமூர்த்தி அணை ஏழு குளம் பாசன பகுதிகளில், கரும்பு சாகுபடி பிரதானம். இங்கு 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இப்பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே, சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிரஷர் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, கரும்பு பிழிந்து எடுத்து, அதிலிருந்து கிடைக்கும் கரும்பு பாலை, பெரிய அளவிலான கொப்பரைகள் வாயிலாக காய்ச்சி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்பு சர்க்கரை உற்பத்தி செய்து வருகின்றனர்.உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சர்க்கரை பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக செல்கின்றன.தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்ததால், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரைக்கு தேவையான கரும்பு கிடைக்காமல், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒவ்வொரு ஆலைகளிலும், தினமும், 5 டன் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் நிலையில், கரும்பு பற்றாக்குறையால், ஒரு டன், இரு டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.கிரஷர் ஆலை அமைத்துள்ள விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடியில் நஷ்டம், வெல்லம், கரும்பு சர்க்கரை உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செய்த சர்க்கரை, வெல்லத்திற்கு உரிய விலை கிடைக்காதது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இத்தொழிலை விட்டு பலர் வெளியேறி வருகின்றனர்.எனவே, அரசு கவனம் செலுத்தி, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உரிய விலை கிடைக்கவும், இயற்கை உற்பத்தி பொருட்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை