திருப்பூர்; கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம், முருகன் கோவில்களில் இன்று நடக்கிறது.கந்தசஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து, விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, காங்கயம் சிவன்மலை சுப்ர மணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அன்றாடம் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சக்தியிடம் வேல் வாங்குதல், சப்பரத்தில் எழுந்தருளல், பல வடிவங்கள் எடுத்து, சூரனை வதம் செய்யும் நிகழ்வு இன்று மாலை, 5:00 மணிக்கு மேல் அனைத்து முருகன் கோவில்களில் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.அதேபோல், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று சூரசம்ஹாரமும், நாளை காலை திருக்கல்யாண உற்சவம் ஆகியன கோலாகலமாக நடக்கிறது.