லட்சம் பனை விதை நடுவதற்கு இலக்கு
பெருமாநல்லுார்; கிராமிய மக்கள் இயக்கம், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில், சொக்கனுார் குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குளக்கரையில் 600 பனை விதைகள் நடப்பட்டன. அகழ் இயந்திரம் மூலம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாபு, கருப்பசாமி, மூர்த்தி, கிராமிய மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ''திருப்பூர் வடக்கு ஒன்றிய கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் மழைக்காலத்திற்கு முன் ஒரு லட்சம் பனை விதை நட முடிவு செய்துள்ளோம். இதுவரை 3, 500 பனை விதை நடவு செய்துள்ளோம். இப்பணி ஞாயிறுதோறும் நடைபெறும். இவ்வாறாக ஒரு லட்சம் இலக்கை அடைவோம்'' என கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறினார்.