சொத்துவரி உயர்வில் விலக்கு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
பல்லடம்; அரசாணைப்படி, சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு, விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் செயலாளர் வேலுசாமி தலைமையிலான விசைத்தறி உரிமையாளர்கள் பல்லடம் நகராட்சி கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.விசைத்தறியாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண விசைத்தறிக்கூடங்கள் 32ஏ கட்டணத்தில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, கடந்த, 27.12.2024 அன்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூலிப்பதற்கு உண்டான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இது, விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில், சொத்து வரி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும், அரசாணைப்படி, சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி கமிஷனர் மனோகரன், இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். விசைத்தறி கூட்டமைப்பின் மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் -கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.