திட்ட சாலையில் தற்காலிக ஆக்கிரமிப்பு; வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
உடுமலை; திட்டசாலையில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்தால், நகர பிரதான ரோடுகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க முடியும்.உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன் திட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, தார்ரோடும் அமைக்கப்பட்டது.அவ்வகையில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் உட்பட பகுதிகளுக்கு வரும், வாகனங்கள் வசதிக்காக, நுாறு அடி திட்ட சாலை, சென்டர் மீடியனுடன் அமைக்கப்பட்டது.இதனால், பெரும்பாலான வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், பழநி ரோட்டில் இணைய வாய்ப்பு ஏற்பட்டது.தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் செஞ்சேரிமலை ரோட்டிலில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல், பயணிக்க முடிந்தது. ஆனால், இந்த நிலை சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.திட்டசாலையில், பல மடங்கு அதிகரித்த தற்காலிக ஆக்கிரமிப்பால், தற்போது அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு வாகன ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.குறிப்பாக, திட்ட சாலை சென்டர் மீடியனை ஒட்டி, வரிசையாக வாகனங்களை நிறுத்தி கொள்கின்றனர். இதனால், குறுகலான இடத்தில், பிற வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. விபத்து அபாயமும் இருப்பதால், மாநில நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டுநர்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் வழியாக, பழநி ரோட்டுக்கு செல்கின்றனர்.எனவே, நகர போக்குவரத்திலும் நெரிசல் அதிகரிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, திட்ட சாலை ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, ரோட்டிலுள்ள, குழிகளை சீரமைத்தால், நகரின் பிரதான ரோடுகளில், நெரிசலை குறைக்க முடியும்.