குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
திருப்பூர்: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், திரையிடல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில், குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றின் மீதான விமர்சனம், அதில் உள்ள மாணவர் நலன் சார்ந்த விஷயங்களும் விவாதிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இம்மாதம் துவங்கவுள்ள சிறார் திரைப்பட விழாவில், முதல் படமாக, 'குரங்கு பெடல்' சினிமா திரையிடப்படுகிறது.'குரங்கு பெடல்' சினிமா இயக்குனர் கமலக்கண்ணன் கூறியதாவது: மொபைல் போன், டிவி, வந்த பின், சினிமா என்பது ஒவ்வொருவருடனும் ஒன்றிப்போய்விட்டது. சினிமாவை ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். உலகம் முழுக்க, சினிமா என்பது, வாழ்வியலின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. அருகேயுள்ள கேரளாவில், பள்ளிகளில் படிக்கும் போதே மாணவ, மாணவியர் திரைப்பட விழாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடப் புத்தகத்தில் சினிமா குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில், கடந்த நான்காண்டாக, பள்ளிகளில், குழந்தைகளுக்கான சினிமா திரையிடப்படுவது, வரவேற்கத்தக்கது. சினிமா, வீடியோ கேம் என அனைத்திலும் வன்முறையும் வந்துவிட்டது. நல்ல சினிமாவை குழந்தைகளிடம் கொண்டு சென்று சேர்க்கும் போது, அவர்கள் வன்முறை நிறைந்த சினிமாவை தவிர்த்து விடுவார்கள். நல்ல சினிமாவை, மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் போது, சிறார் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். 'குரங்கு பெடல்' சினிமா 16 லட்சம் பேர் பார்வை உலகளவில், குழந்தைகளுக்கெனவே நிறைய சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதற்கான சந்தை குறைவு என்பதால், குழந்தைகளுக்கான சினிமா குறைவாகவே எடுக்கப்படுகிறது. குரங்கு பெடல் சினிமாவை, 16 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட உள்ளனர். - கமலக்கண்ணன், இயக்குனர், 'குரங்கு பெடல்' திரைப்படம்.