உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
உடுமலை: உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர். இங்கு, அனைத்து வகை காய்கறிகளும் கிடைப்பதால், மக்களும் ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். உழவர்சந்தையின் வெளியில், ரோட்டில் காலை நேரங்களில் தற்காலிக காய்கறி உட்பட பல்வேறு கடைகள் போடப்படுகின்றன. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமலும், பிற வாகனங்கள் செல்வதிலும் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.