உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டோரத்தில், வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச்செல்வதால், போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகியும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.உடுமலை பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் சிக்னல் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல் கல்பனா ரோடு சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மீடியன் வைத்ததால், தேசிய நெடுஞ்சாலை ஒற்றையடி பாதை போல குறுகலாக மாறியது. அதிலும், பழநி உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்டர் மீடியன் பகுதியை கடப்பதற்கு திணற வேண்டியுள்ளது.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விதிமுறைகளை மீறி, வாகனங்களை நிறுத்துவதே இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாகும். அங்குள்ள தனியார் வணிக வளாகத்துக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையிலுள்ள பகுதி முழுவதுமாக, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.ரோட்டோரத்தில் நிற்கும் வாகனங்களுக்கும், சென்டர் மீடியனுக்கு இடையிலுள்ள குறுகலான இடத்தில், பஸ், லாரி உட்பட அனைத்து வாகனங்களும், சாகச பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.வாகன ஓட்டுநர்கள் திணறியபடி அப்பகுதியை கடக்கும் போது, இதற்கிடையே சென்டர் மீடியனுக்கு இடையே பாதசாரிகளும், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.இவ்வாறு, பஸ் ஸ்டாண்ட் பகுதி முழுவதும், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்தும் போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க முடியாமலும், வாகன ஓட்டுநர்கள் விபத்தில்லாமல் அப்பகுதியை கடக்கவும் போராட வேண்டியுள்ளது.விதிகளை மீறி, தேசிய நெடுஞ்சாலையையொட்டி, நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபாரதம் விதிக்க வேண்டும்; அங்குள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலை குறைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை