போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 1005 வழக்குகள்!
திருப்பூர்: காங்கயம் போக்குவரத்து பிரிவு போலீசார் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், போக்குவரத்து விதிகளை மீறியதாக, 1005 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.சாலை விபத்துகளை தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தால் நேரிடும் உயிர் பலிக்கு, சாலை விதிகளை மதிக்காதது தான், காரணம் என போலீசார் கூறி வருகின்றனர். காங்கயம் போலீசாரின் வாகன தணிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுவது; அதிவேகமாக வாகனங்களை இயக்குவது; போக்குவரத்து சிக்னல்களை மீறுவது; தலைகவசம் அணியாதது; சீட் பெல்ட், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற, 20 பிரிவுகளின் கீழ் போக்குவரத்து போலீசார் வழக்குகள் பதிவு செய்கின்றனர்.காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி மேற்பார்வையில், போலீசார், கடந்த மே மாதம் காங்கயம் நகரப்பகுதியிலுள்ள தாராபுரம் ரோடு, கோவை ரோடு, காங்கயம் பஸ் ஸ்டாண்ட், சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு, திருச்சி சாலை, பழையகோட்டை ரோடு மற்றும் முத்துார் பிரிவு உள்ளிட்ட ரோடுகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், 1005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாக, 27,700 ரூபாய்; நீதிமன்ற அபராதமாகக 1.15 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.