புதிய பயணம் - வளர்ச்சியை நோக்கி குறுந்தொழில்முனைவோருக்கு பயிற்சி
திருப்பூர் : திருப்பூர் கிளை சி.ஐ.ஐ., சார்பில், 'புதிய பயணம் - வளர்ச்சியை நோக்கி' திட்ட பயிற்சி முகாம், நவ., 6, 7 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடக்கிறது.இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், குறு, சிறு தொழில்முனைவோருக்கான மேலாண்மை மற்றும் தகவமைப்பு திறன் பயிற்சி அளிக்கும், 'சென்டர் ஆப் எக்செலன்ஸ்' கமிட்டி இயங்கி வருகிறது. குறுந்தொழில் முனைவோருக்கு அத்தியாவசியமான, எளிமைப்படுத்தப்பட்ட வகையில், எதை, எப்படி செய்ய வேண்டும் என்ற நடைமுறையை விளக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தொழில்முனைவோர்களுக்கு, அவர்களின் வணிகங்களை தொழில்முறை வழியில் நடத்த தேவையான திறன் மேம்படுத்தப்படுகிறது. நிதி மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்த புரிதல் ஏற்படுத்தப்படுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக அமைப்பு, 'புதிய பயணம் - வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில், இவ்வகை பயிற்சி அளித்து வருகிறது.இத்திட்டத்தில், முதலில் பதிவு செய்யும், 50 குறு தொழில் முனைவோருக்கு, முற்றிலும் இலவசமாக இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது, ஐந்து கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்கும் தொழில் முனைவோர், இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். வரும், நவ., 6 மற்றும் 7ம் தேதிகளில், திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
எதற்காக பயிற்சி?
தொழில்முனைவோர், தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கவும், நிலையான வளர்ச்சியை உருவாக்கவும், இருப்பு நிலை தயாரித்தல், பணப்புழக்க மேலாண்மை தேர்ச்சி போன்ற நிதி செயலறிவை பெறவும், இந்த பயிற்சியில் இணையலாம். சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை போன்ற புரிதலின் மூலம், அதிக சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் திறனை பெறலாம். திருப்பூரில் நடைபெற உள்ள பயிற்சியில் இணைய, குறுந்தொழில் முனைவோர், 90034 40167 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.- தினேஷ் பாபு, திருப்பூர் கிளைச்செயலாளர், சி.ஐ.ஐ.,