ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
உடுமலை ; உடுமலை கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., துாரம் கொண்டது. உடுமலையிலிருந்து பழநிக்கு மாற்றுப்பாதையாக மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது.பொதுமக்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள ரோடாக உள்ளது.இந்த ரோட்டில், நகர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது. பிரதான போக்குவரத்து ரோடாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது. எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேலும், திண்டுக்கல் - -பாலக்காடு அகல ரயில்பாதை செல்கிறது. அகல ரயில்பாதையில், ரயில்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், ரயில்கள் கடக்கும் போது, பல கி.மீ.,துாரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே, கொழுமம் ரோட்டை அகலப்படுத்தவும், ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.