குரல் கொடுக்க வேண்டும்! அரசிடம் தொழில்நுட்ப ஆலோசனை குழு
திருப்பூர் : ஜவுளித்தொழில் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் அமைத்த, மாநில அளவிலான தொழில்நுட்ப ஆலோசனை குழு வாயிலாக, திருப்பூர் பனியன் தொழிலுக்கு தேவையான சலுகையை பெற முயற்சிக்க வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். நுாற்பாலைகள், ஜவுளி உற்பத்தி, பின்னலாடை, ஆயத்த ஆடை, உள்நாட்டு பனியன் ஆடை மற்றும் உள்ளாடைகள் என, தமிழகத்தின் வளர்ச்சியில், ஜவுளித்தொழில் பிரதான பங்கு வகிக்கிறது. பஞ்சு, நுால் விலை உட்பட, பல்வேறு காரணங்களாக, ஜவுளித்தொழில் அவ்வப்போது சவால்களை சந்திக்க நேரிடுகிறது.புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, ஜவுளித்தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், கைத்தறித்துறை அமைச்சர் தலைமையில், ஜவுளி தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நுால்துறை அமைச்சர் தலைமையில், கைத்தறி, கைத்திறன், துணிநுால் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மை செயலர், துணிநுால்துறை கமிஷனர், தொழில்நுட்ப இணை இயக்குனர், நிர்வாக பிரிவு இணை இயக்குனர் ஆகியேர் அரசு சார்ந்த உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள பல்வேறு ஜவுளி தொழில் பிரிவுகளை சேர்ந்த, 20 பேர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் 'பியோ' தலைவர் சக்திவேல், 'சைமா' தலைவர் ஈஸ்வரன், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். தொழில்நுட்ப ஆலோசனை குழு, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர குழுவாக செயல்படும். தேவையான ஆலோசனையை அரசுக்கு பரிந்துரைக்கும். திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, மின் கட்டணம், வரியினங்கள் உயர்வு, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் வாகன தணிக்கை என, பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. அவற்றை சீர்படுத்த, அரசுக்கு தேவையான பரிந்துரையை அனுப்ப, இக்குழுவை கூட்டலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில் பாதுகாப்பு முக்கியம்
வடமாநில அரசுகள், மின் கட்டணம், தொழில் முதலீட்டு கடன் சலுகை உட்பட, பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் துவங்க வருமாறு அழைக்கின்றன. தமிழகத்தில், பனியன் தொழில் உள்ளிட்ட குறு, சிறு தொழில்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன; தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்ற வடமாநில தொழிலாளர்கள் குழுவாக சென்று, தொழில் துவங்க ஆயத்தமாகி வருகின்றனர்.பெரிய நிறுவனங்களும், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகளை துவக்க ஆயத்தமாகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், திருப்பூரில் உள்ள பெரிய நிறுவனங்கள், வடமாநிலத்தில் தங்களது யூனிட்டை திறக்கும். அதன்பின், படிப்படியக பனியன் தொழில் மொத்தமாக தமிழகத்துக்கு வெளியே சென்று விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தொழில்துறையினர், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் சோர்ந்து போயுள்ளனர். எனவே, பனியன் தொழிலை பாதுகாப்பதற்கான உதவிகள் வேண்டி, தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் பரிந்துரைக்க வேண்டும்.- திருப்பூர் பனியன் தொழில்துறையினர்