செல்வ மகள் சேமிப்பு திட்டம்: 11 மாதத்தில் 5,300 கணக்குகள்
திருப்பூர்; மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம். கடந்த, 2015ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை திருப்பூர் மண்டலத்தில், 97 ஆயிரம் பேர் வரை சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனர். கடந்த, 2024 மார்ச் முதல், 2025 ஜனவரி வரையிலான நிதியாண்டின், 11 மாதங்களில், 5 ஆயிரத்து, 300 பேர் புதிய கணக்கு துவக்கியுள்ளனர்.தபால் துறையினர் கூறுகையில், ''புதிய கணக்கு துவங்குவதில் ஒரு புறம் ஆர்வம் இருந்தாலும், இடைநின்ற கணக்கை புதுப்பிக்க பலரும் அக்கறை செலுத்துவதில்லை. 50 ரூபாய் அபராதம் செலுத்தினால், விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம். எந்த திட்டத்திலும் இல்லாத வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தான், முதலீடு செய்யும் தொகைக்கு 'பிரிவு 80 சி' -இன் கீழ் வரிவிலக்கு உள்ளது. பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம். கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் அதற்கும் வழியுண்டு. 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி கணக்கை மாற்றிக்கொள்ளலாம்,' என்றனர்.