மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரை சந்திக்க முடியாதது ஏன்?
திருப்பூர்: ''அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு குறித்த நேரத்துக்குள் நோயாளிகள் வராததால் சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது'' என்று காரணம் கூறப்படுகிறது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, காலை, 7:30 முதல், 11:30 மணி வரை செயல்படுகிறது. டாக்டர்கள் மதியம், 12:00 மணி வரை பணியில் இருக்கின்றனர். பன்முக மருத்துவ வசதிகளுடன், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படுவதால், தினமும், 1,500 முதல், 2,200 நோயாளிகள் வரை, 500க்கும் அதிகமான குழந்தைகளுடன் பெற்றோர் டாக்டர்களை சந்தித்து, மருத்துவ ஆலோசனை பெற வருகின்றனர்.கூட்ட நெரிசல், தொடர்ந்து காத்திருப்போரின் நன்மை கருதி, ஒரு நோயாளிக்கு டாக்டர்கள் ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை எடுத்துக் கொள்கின்றனர். தொடர் சிகிச்சைக்காக வருவோர், மாதாந்திர மாத்திரை வாங்குவோர், ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைக்கு வருவோரை தனித்தனியே பிரித்து, டாக்டர், செவிலியர் குழு நியமித்த போதும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.குறிப்பாக, மழை காலங்களில் காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், உடல்சோர்வு உள்ளிட்டவற்றுக்கு மட்டும், 200 முதல், 400 பேர் வரை வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகளவில் நோயாளிகள் வருவதுடன், புற நோயாளிகள் பிரிவு முடியும் நேரத்துக்கு, அதாவது காலை, 11:30 மணிக்கு பின்னரும் நோயாளிகள் வருகின்றனர். இதனால், சிறப்பு டாக்டர்களை இவர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இச்சிரமங்களை தவிர்த்து, டாக்டர்கள் பணி முடிக்க ஏதுவாக, நோயாளிகள், முன்கூட்டியே மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரம் முக்கியம்
இடைவெளி இல்லாமல், தொடர்ந்து, நோயாளிகளை டாக்டர்கள் பார்வையிட்டு, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மருந்து, மாத்திரை எழுதி தருகின்றனர். ஊசி செலுத்துமிடமும் செயல்படுகிறது. சிலர் காலை, 11:30 மணியை கடந்து மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, சிறப்பு டாக்டர்களை சந்திப்பதில், சிகிச்சை குறித்து கேட்டறிய தாமதம் ஏற்படுகிறது. எனவே, முடிந்தவரை நேரத்தில் வந்தால், டாக்டர் ஆலோசனை பெற தொடர் சிகிச்சை பெற வசதியாக இருக்கும்.- அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள்.