கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகள்; கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூர்: விவசாயிகளை கதிகலங்க வைக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்தும், உரிய இழப்பீடு வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா பகுதிகளில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளன.இனபெருக்கத்தால், காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விவசாய பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன.எருமை மற்றும் மாடுகளை தாக்கி வந்த காட்டுப்பன்றிகள், மனிதர்களையும் தாக்க துவங்கிவிட்டதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட அளவிலான குறைகேட்பில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இதுதொடர்பாக பேசினர்.காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது; எவ்வித பயிர்களும் செய்ய முடியவில்லை. மாடுகளை முட்டி தாக்கும் பன்றிகள், தற்போது மனிதர்களை கண்டால், துரத்தி துரத்தி தாக்க துவங்கிவிட்டன. உயிர்பயத்துடன் வாழ வேண்டியுள்ளது.காட்டுப்பன்றிகளை, வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''காட்டுப்பன்றி தொல்லை குறித்து, ஒவ்வொரு மாதமும் புகார் அளிக்கின்றனர்.வேளாண் பயிர்களை பாதுகாக்க, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நியாயமான இழப்பீடும் வழங்க வேண்டும். வனத்துறையினர் இதுதொடர்பாக கள ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேச வேண்டும்.காட்டுப்பன்றி பாதிப்பு தொடர்பாக, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். எருமையின் தலையை உடைத்த காட்டுப்பன்றி
மடத்துக்குளம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேசுகையில், 'எனது தோட்டத்தில், தினமும், 15 லிட்டர் பால் கறவையுள்ள எருமை மாடு வளர்த்து வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுப்பன்றி, வேகமாக முட்டியதில், எருமையின் தலை இரண்டாக உடைந்து இறந்து விட்டது,' என கண்ணீர்மல்க பேசினார். இதனை கேட்ட மற்ற விவசாயிகள், காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுப்பினர்.