வலையில் சிக்காத திமிங்கிலங்கள் போலீஸ் கமிஷனர் சாட்டை சுழலுமா?
குட்கா, கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினர் இதன் பாதிப்பு தெரியாமல் பின்னால் சென்று வருகின்றனர்.சமுதாயத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீஸ் தரப்பில் பல விதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு போதை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.திருப்பூரை போன்ற தொழிலாளர் அதிகமுள்ள நகரத்தில் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் சார்ந்த பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர், தொழிலாளர்களை குறி வைத்து போதை கும்பல்கள் எளிதாக புழக்கத்தில் விடுகின்றனர். தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை இருந்தாலும், சட்ட விரோதமாக பல வகையில் கடத்தப்பட்டு நகரில் புழக்கத்தில் விடுகின்றனர். சமீப காலமாக இதன் புழக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது.தனிப்படையினர் கண்காணிப்புசில மாதங்களாக மாநகரில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குற்ற தடுப்பு, கண்காணிப்பு பணியை மட்டுமல்லாமல் எந்த வழியில் எல்லாம் நகரில் புழக்கத்துக்கு கொண்டு வருகின்றனர் என்பதை கண்காணிக்கின்றனர். இதுதொடர்பாக பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை உற்று நோக்கி வருகின்றனர்.போதை பொருட்கள் பறிமுதல்தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவற்றை சமீபத்தில் பறிமுதல் செய்து, 15 பேரை கைது செய்தனர். இவை அனைத்தும் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, போதைக்கு பயன்படுத்த வாங்கி வந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல், ரயில்களில் கடத்தி வரும் கஞ்சா பொட்டலங்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும், 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஓட்டல்களில் சந்தேகப்படும் வகையில் அறை எடுத்து தங்குபவர்கள், ரயில்கள் என, அனைத்தும் போலீசார் கண்காணிப்பு வட்டத்தில் உள்ளது.முக்கிய புள்ளிகள்சிக்குவதில்லைபோலீசார் கைது நடவடிக்கையில், முக்கிய புள்ளிகள் சிக்குவதில்லை. விற்பனைக்கு கொடுத்து விடும் நபர்கள் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். பெங்களூர் போன்ற இடத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு வாங்கி வருவது, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவற்றை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. எனவே, தற்போது சிக்குபவர்களை கைது செய்வதை விட, அதன் பின்னணியில் வெளியூரில் இருப்பவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.
கட்டுக்கடங்காத போதை பொருள் புழக்கம்கட்டுப்படுத்த மா.கம்யூ., வலியுறுத்தல்
திருப்பூர் பகுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ., வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., செயற்குழு கூட்டம் பவித்ராதேவி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இவை விற்பனையாகிறது. இளம் தலைமுறையினர் பலர் போதை பழக்கத்திற்கு ஆளாகின்றனர். போதை ஏறிய சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.போதைப் பொருட்கள் புழக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், இந்த சமூக விரோத கும்பலுக்கு மறைமுக ஆதரவாகவுள்ளனர். போதை கும்பல் பற்றி தகவல் தெரிவித்தாலோ, குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போதை பேர்வழிகளை பிடித்துக் கொடுத்தாலோ போலீசார் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால் சமூக விரோதிகள் பொதுமக்களையும், குறிப்பாக இவர்களது சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தும், சமூக நலனில் அக்கறையோடு செயல்படுவோரையும் அச்சுறுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது. முருகம்பாளையம் சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். அப்பகுதி மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் விற்பனையை கண்டறிந்து தடை செய்யவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீவிர சோதனை தொடரும்...
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து தனிப்படையினர் கண்காணிப்பு காரணமாக, விற்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தீவிர சோதனையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் சிக்கியுள்ளது. புழக்கத்தை தடுத்து, விற்பவர்களை கைது செய்ய அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டல், ரயில்களில் சந்தேகப்படும் வகையில் வருபவர்களை மட்டும் தான் சோதனை செய்யப்படுகிறது. மற்றவர்களை போலீசார் இடையூறு செய்வதில்லை.இவ்வாறு, அவர் கூறினர்.