உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலி தங்கக்கட்டிகள் கொடுத்து பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி

போலி தங்கக்கட்டிகள் கொடுத்து பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி

திருப்பூர்; திருப்பூர் வாய்க்கால்மேடைச் சேர்ந்த ஜோதி, 40 என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: எனக்கு அறிமுகமான 2 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர், பள்ளி மற்றும் 'ஸ்பா' தொழிலை விரிவு படுத்த வேண்டும்; அதற்கு பணம் தேவைப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்தனர். ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள நகை கடையில் ஆயிரம் கிராம் தங்கக்கட்டிகள் மற்றும் ஒரு கிராம் எடையுள்ள, 24 தங்க காசுகள் உள்ளதாகவும், நான்கு பேரும் கூறினர். இதை வாங்கி கொண்டு, 15 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு கேட்டனர். இதை நம்பி, பணத்தை கொடுத்து, நகையை பெற்றேன். கடந்த 5ம் தேதி அந்த நகைகளை, மகள்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம் என்று பீரோவை திறந்து பார்த்த போது, அனைத்து நகைகளும் கறுத்து போய் இருந்தது. போலி நகைகளை வாங்கியது தெரிந்தது. பணத்தை திருப்பி கேட்டபோது தர முடியாது என்று கூறி, நான்கு பேரும் மிரட்டல் விடுத்தனர். நகை கொடுத்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இதில் இருவர் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கு உள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை