மேலும் செய்திகள்
விளை நிலமாக்க மானியம் வேளாண் இணை இயக்குனர் தகவல்
04-Jul-2025
திருப்பூர்; 'வீணாக கிடக்கும் தரிசு நிலங்களிலும் விளைச்சல் பெறும் வகையிலான திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும்' என, வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் துறையினர் கூறியதாவது:கிராம ஊராட்சிகளும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றவும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்றதாக கொண்டு வரவும், உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், கடந்த, 2021 - 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலம் வைத்துள்ள, 6 அல்லது அதற்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுவாக இணைந்து, குறைந்தபட்சம், 10 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அத்தொகுப்பில் நீராதாரங்கள் மற்றும் நுண்ணீர்பாசனம் அமைத்து, சாகுபடிக்கு ஏற்றதாக மாற்ற இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி, நிலத்தை சமன் செய்து உழுவதற்கு, எக்டர் ஒன்றுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது, 9,600 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 5 கிலோ பயறு விதைக்கு 50 சதவீதம் மானியம் அல்லது, அதிகபட்சம், 300 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி, மண் வளத்தை மேம்படுத்த, செயல்விளக்கத் திடல் அமைக்க எக்டர் ஒன்றுக்கு, அதிகபட்சம், 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விதைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். விவசாயிகள், இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும்.
04-Jul-2025