உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு

மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு

''ஜவுளி தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, கூட்டு கமிட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.அவர் நம்மிடம் பகிர்ந்தவை:பஞ்சு விலை கட்டுக்குள் வந்து, கடந்த டிச., மாதத்துக்கு முன், ஜவுளி தொழில் ஓரளவு வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்தது. இதற்கிடையே, கூலி கட்டுப்படியாகவில்லை என்று கூறி, விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகப்படியான ஆர்டர்கள் வடமாநிலங்களுக்கு சென்று விட்டன.

மீண்டும் எழுந்த சிக்கல்

விசைத்தறியாளருடன் கலந்து பேசி, சுமூக தீர்வு காணப்பட்டு, கடந்த ஒரு மாதமாக, வழக்கம்போல் உற்பத்தி நடந்து வருகிறது. இச்சூழலில், சில ஓபன் எண்ட் (ஓ.இ.,) ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள், நுால் உற்பத்தி நிறுத்தம் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட நுால் ஆர்டர்களை வழங்காமல் திடீரென நிறுத்தியதால், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழிலுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற போராட்டங்களால், ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தொழிலுக்கு பின்னடைவு

தொடர் போராட்டங்களால், ஆர்டர்களை ஒருபுறம் இழக்க, தொழிலாளர்களும், வேறு தொழிலுக்கு சென்று விடுகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வரும் எங்களைப் போன்றவர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.இது, ஜவுளி தொழிலுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், மத்திய - மாநில அரசுகள், தொழிலில் நிலவி வரும் இப்பிரச்னையை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

ஒருங்கிணைப்பு அவசியம்

ஓ.இ., மில் உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்துறையினரை ஒருங்கிணைத்து, 'கூட்டு கமிட்டி' அமைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி