குரூப் -2 போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சியில் பங்கேற்கலாம்
உடுமலை; மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக, ' குரூப் -2 மற்றும் குரூப் -2 ஏ' போட்டித்தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, குண்டடம் ஒன்றிய அலுவலகத்தில், நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளைநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை -2 உள்ளிட்ட, 'குரூப்-2' பணியிடங்கள்; முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற குரூப்-2 ஏ'பணிகளுக்கு என, 645 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகள், செப்., 28ம் தேதி நடக்க உள்ளது; திருப்பூர் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் செயல்படும், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், குரூப் -2 மற்றும் குரூப் -2 ஏ ஆகிய பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, குண்டடம் ஒன்றிய அலுவலகத்தில் நடக்க உள்ளது. வரும், 24ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு துவங்குகிறது; மாதம் இருமுறை மாதிரி தேர்வும் நடத்தப்படும். போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 0421 299152, 94990 55944 எண்ணிலோ, நேரிலோ வந்து பதிவு செய்துகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.