உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தீபாவளி சீட்டு நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு சீல்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு சீல்

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த வி.ஆர்.எஸ்., நிதி நிறுவனம், ஆண்டுக்கு, 36,000 ரூபாய் செலுத்தினால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, மளிகை பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் தீபாவளியை ஒட்டி வழங்கப்படும் எனக் கூறியது. அதை உண்மை என நம்பி திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, பொதுமக்களிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தனர். கடந்த, 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தங்க நாணயம், மளிகை பொருட்களை வழங்காமல் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் சம்சு மொய்தீன், குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆறு மாதத்திற்கு முன், அவரை கைது செய்தனர்.இந்நிலையில் செய்யாறில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி செய்யாறு கிளையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இயங்கி வந்த, வி.ஆர்.எஸ்., நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் சார்பாக, இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. ஆனால், நிதி நிறுவனம் கடனை திருப்பி செலுத்தாததால், வங்கி நிர்வாகத்தினர், திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிதி நிறுவனத்தால், 'சீல்' வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, வி.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு, சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை