| ADDED : ஜூன் 13, 2024 02:39 AM
திருச்சி:திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன், கடந்த சில மாதங்களுக்கு முன் 'என்கவுன்டர்' செய்து கொல்லப்பட்டார். இதற்கு காரணம், திருச்சி எஸ்.பி., வருண்குமார் தான் என்று நினைத்த, ஜெகன் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் சிறுவர் மூலம் கொலை மிரட்டல் விடுக்கும் வாசகங்களை பதிவேற்றம் செய்தனர்.வாத்தலை போலீசார் ஒரு சிறுவன் மீது வழக்கு பதிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்றும் கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை, திருச்சி எஸ்.பி., வருண்குமார் தன் அலுவலகத்துக்கு அழைத்து, சிறுவனுக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.அப்போது, 'சமூக வலைதளங்களில் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் உண்மை கதைகள் உள்ளன. விவேகானந்தர், மகாத்மா, அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் உன்னை ஈர்க்கவில்லையா... மனதை நெறிப்படுத்தி நன்றாக படித்து வேலைக்கு செல்' என்று எஸ்.பி., அறிவுறுத்தினார். மேலும், சிறுவன் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.