| ADDED : ஜூன் 30, 2024 02:31 AM
திருச்சி,:திருச்சி மாநகர பகுதியில் மொபைல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததால், கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். நேற்று அதிகாலை திருச்சி- - கரூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே, அறிவாலயம் அமைந்துள்ள பகுதியில், ரவுடிகள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கோட்டை ஸ்டேஷன் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் தப்பி ஓட முயன்றனர். போலீசார், அவர்களை துரத்திச் சென்று அண்ணா சிலை அருகே மடக்கி பிடிக்க முயன்றனர்.இதில், ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் பட்டாக்கத்தியால் போலீஸ்காரர் அப்துல் காதரை வெட்டினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே மூவரும் தப்பினர். காயமடைந்த அப்துல் காதர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தப்பிய பாலக்கரை, மேலப்புதுாரை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூன்று பேரை பிடித்தனர். இந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.