| ADDED : செப் 24, 2011 01:00 AM
திருச்சி: திருச்சியில் டிரைவர்களை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து ஷேர் ஆட்டோக்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டது. இதனால், எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம் பகுதிகளுக்கு உடனடியாக செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். திருச்சியில் மொத்தம் 50 ஷேர் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலானவை திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டிலிருந்து எடமலைப்பட்டி புதூர், கே.கே.நகர், கருமண்டபம் ஆகிய பகுதிகளுக்கு செல்பவையாகும். மேற்கண்ட பகுதிகளுக்கு அடிக்கடி பஸ் இல்லாததும், பஸ்களில் எப்போதும் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், அப்பகுதி மக்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இன்றியமையாததாக மாறிவிட்டது. கே.கே.நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளிலிருந்து, சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள், பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள தேவர் சிலைக்கு பின்புறம் ஆட்களை இறக்கி விடுகின்றனர். இந்த ஏற்பாட்டை மாநகர போக்குவரத்து போலீஸாரே செய்துள்ளனர். அதன்பின், அவர்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று வழக்கம் போல் ஷேர்ஆட்டோ டிரைவர்கள் தேவர் சிலை அருகே பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். அப்போது சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கண்டோன்மெண்ட் போலீஸார் திடீரென ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் ஒன்றுகூடி, ஷேர் ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகள், தங்களின் இருப்பிடம் திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். போலீஸாரின் அத்துமீறல் குறித்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய முடிவு செய்தள்ளனர். * கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: நேற்று முன்தினம் கே.கே.நகரிலிருந்து வந்த ஷேர் ஆட்டோவில் கல்லூரி மாணவிகள் நின்று கொண்டு பயணம் செய்துள்ளனர். ஆட்டோ ரயில்வே மேம்பாலம் தாண்டி வரும்போது, அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ்காரர், ஆட்டோவிலிருந்த கல்லூரி மாணவியை கையைப்பிடித்து கீழே இழுத்துள்ளார். இதில், அவமானமடைந்த மாணவி கூனிக்குறுகி நின்றார். பெண் பயணிகள் முன்னிலையில் ஆட்டோ டிரைவரிடம் அருவருக்கத்தக்க வார்த்தைகளை போலீஸ்காரர் பேசியுள்ளார். அவர்மீதும் நடவடிக்கை எடுக்க ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.