| ADDED : ஆக 22, 2011 02:27 AM
திருச்சி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் மயக்க மினரல் வாட்டரை கொடுத்து, பத்தரை பவுன் நகையை திருடிய மர்மப்பெண்ணை போலீஸார் தேடுகின்றனர்.தேனி மாவட்டம் கணேசபுரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி
உதயசூர்யா (25). கடந்த 18ம் தேதி தஞ்சையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக
வந்தார். மீண்டும் ஊர் திரும்ப அன்றிரவு திருச்சி செல்லும் பஸ்சில்
ஏறினார். திருட்டு பயத்தால் தான் அணிந்திருந்த பத்தரை பவுன் நகைகளை
கர்ச்சீப்பில் மடித்து, பர்ஸ்சில் வைத்து கொண்டார். அவர் அருகில் அடையாளம்
தெரிந்த, முகவரி தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் அமர்ந்திருந்தார்.
உதயசூர்யாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்த அந்த பெண் கொடுத்த மினரல்
வாட்டர் தண்ணீரை வாங்கி குடித்தார்.குடித்த சில நிமிடங்களில் மயங்கி சரிந்தார். உதயசூர்யாவை அந்தப்பெண்
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மாயமானார்.
மயக்கம் தெளிந்து பார்த்தபோது, உதயசூர்யா வைத்திருந்த, இரண்டு லட்ச ரூபாய்
மதிப்புள்ள பத்தரை பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து
உதயசூர்யா கொடுத்த புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸார்
மர்மப்பெண்ணை தேடி வருகின்றனர்.