உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசிய எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் :திருச்சி எஸ்.பி., அதிரடி

எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசிய எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் :திருச்சி எஸ்.பி., அதிரடி

துவரங்குறிச்சி: வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் பலரின் முன்னிலையில் எஸ்.ஐ.,யைத் தரக்குறைவாக பேசிய எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் பால்ராஜ் (56). அதே போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பெருமாள் (54). எஸ்.எஸ்.ஐ., பெருமாள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருச்சி நவலூர் குட்டப்பட்டிலிருந்து பணியிட மாறுதலாகி வளநாடு போலீஸ் ஸ்டேஷன் வந்தார். பெருமாள் ஏற்கனவே வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் சில ஆண்டு ஏட்டாக வேலை பார்த்தவர் என்பதால், அந்த பகுதியில் பழக்கம் அதிகம். இதனால் பல விஷயங்களில் எஸ்.ஐ., பால்ராஜை ஆலோசிக்காமல் பெருமாளே தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். இதனால், வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பால்ராஜூம், எஸ்.எஸ்.ஐ., பெருமாளும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் பெருமாளுக்கு பணி ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்களும், பல போலீஸாரும் இருந்துள்ளனர். அதை கண்டுகொள்ளாமல், எஸ்.ஐ., பால்ராஜை பெருமாள் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தகராறு செய்துள்ளார். எஸ்.ஐ., பால்ராஜ் மணப்பாறை டி.எஸ்.பி., தொல்காப்பியனிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி., எஸ்.பி., லலிதா லட்சுமி கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக செயல்பட்ட எஸ்.பி., லலிதா லட்சுமி மைக்கில் எஸ்.எஸ்.ஐ., பெருமாளை அழைத்து, உடனடியாக திருச்சி ஆயுதப்படை பிரிவில் பணியில் சேருமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் மணப்பாறை வட்டார போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ