போலீஸ் குடியிருப்பில் கொலை: கைதான மூவருக்கு மாவுக்கட்டு
திருச்சி: திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மூவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. திருச்சி, பீமநகரை சேர்ந்த தாமரைச்செல்வன், 25, என்பவர் முன்விரோதம் காரணமாக துரத்தப்பட்ட போது, போலீஸ் குடியிருப்பில் உள்ள எஸ்.எஸ்.ஐ., வீட்டில் தஞ்சம் புகுந்த நிலையில், நேற்று முன்தினம், ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் இளமாறன் என்பவர் சிக்கினார். மற்ற நான்கு பேரை, பாலக்கரை போலீசார் தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் பதுங்கியிருந்த, வழக்கின் முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அவர் இரு போலீஸ்காரர்களை தாக்கியதால், ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அவரது காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே போல பிரபாகரன், கணேசன், நந்து ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. மூவரும், அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுகின்றனர். பாலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.