பாஸ்போர்ட்டில் ரெட் சீல் பக்கம் கிழித்த வாலிபர் சிக்கினார்
திருச்சி : கிழக்காசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு விமானத்தில், திருச்சி வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர், 39, என்பவர், தன் பாஸ்போர்ட்டில், ஒரு பக்கத்தை கிழித்துவிட்டு, அந்த இடத்தில் போலியாக வேறு ஒரு பக்கத்தை இணைத்திருந்தது தெரிந்தது.கிழித்த அந்த பக்கத்தில், அவர், மலேஷியாவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, சிவப்பு நிற 'சீல்' அடிக்கப்பட்டிருந்தது. அந்த சீல் வைத்திருந்த பக்கத்தை அவர் கிழித்ததால், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.