| ADDED : செப் 01, 2011 01:47 AM
திருச்சி: திருச்சி மாநகரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய இருவாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏழரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாநகரில் பூட்டிய வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்தது. அதைக் கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவின் பேரில், டி.சி., ராமையா தலைமையில், குற்றப்பிரிவு ஏ.சி., லலிதா உள்ளிட்ட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி, அடிக்கடி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு நாளுக்கு முன் குழுமணி ரோட்டில் தனிப்படை போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது டூவீலரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் (19), முடிதூக்கி என்கிற பூபதி (19) என்று தெரியவந்தது. இருவரும் திருச்சி மாநகரில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்தது.தில்லைநகரில் பூட்டியிருந்த ஐஸ்கிரீம் பார்லரில் கம்ப்யூட்டர் கொள்ளை, உறையூர் களத்துமேட்டில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஐந்து பவுன் நகை கொள்ளை, உறையூர் பாத்திமா நகர், அம்மன் நகர் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைக் கொள்ளை போன்ற சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 32 பவுன் நகை மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சில பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாநகரில் தொடர்ச்சியாக பூட்டியிருந்த வீடுகளையும், கடையையும் குறிவைத்து கொள்ளை அடித்த வாலிபர்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை டி.சி., ராமையா பாராட்டினார்.