| ADDED : செப் 26, 2011 11:52 PM
திருச்சி: வீரமணிப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி கடன் வாங்கியதாக, அச்சங்க செயலர், வி.ஏ.ஓ., உள்பட மூவர் பணம் மோசடி செய்ததாக திண்ணக்கோணம் பகுதி பொதுமக்கள் திருச்சி கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர். முசிறி, திண்ணக்கோணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் திண்ணக்கோணம் பகுதியில் வசிக்கிறோம். வேளக்காநத்தம், வீரமணிப்பட்டியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் நாங்கள் (20 பேர்) கடன் வாங்கி ஏமாற்றியதாக முசிறி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் விசாரணை அலுவலர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், நாங்கள் அனைவரும் அந்த கடன் சங்கத்தில் எந்தவிதமான கடனும் வாங்கவில்லை. நாங்கள் கடன் வாங்கியதாக எங்களது பெயரில் பொய்யான கணக்குகள் எழுதி அந்த கூட்டுறவு கடன் சங்க செயலர், வி.ஏ.ஓ., உதவியாளர் ராசு ஆகிய மூவரும் மோசடி செய்துள்ளனர். எங்கள் பெயரை பயன்படுத்தி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி எங்களுக்குத் தெரியாமல் நடந்தது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.