ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சி கூச்சலிட்டதால் கீழே தள்ளிவிட்டு தப்பியவர் கைது
வேலுார்:வேலுார் அருகே, ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் அவர் கூச்சலிட்டதால், ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்த 25 வயது பெண், வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். எக்ஸ்பிரஸ் ரயில்
தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள அவர், ஆந்திர மாநிலம் சித்துார் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக, கோவை - திருப்பதி இடையே செல்லும் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், மகளிருக்கான பெட்டியில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.ஜோலார்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், சக பெண் பயணியர் இறங்கி விட்டனர். கர்ப்பிணி மட்டும் தனியாக பயணித்தார். வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ், 28, மகளிர் பெட்டியில் ஏறினார். அப்போது, 'இது பெண்கள் பெட்டி' என்று அந்த பெண் கூறினார்.'அதற்கு ஹேமராஜ், அவசரத்தில் தெரியாமல் ஏறி விட்டதாகவும், அடுத்த நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாகவும் கூறினார். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், அவர், பெட்டியில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தார். சிறிது நேரத்திற்கு பின், ரயில் பெட்டியின் கழிப்பறைக்கு சென்றார். சில நிமிடங்களில் பேன்ட், சட்டையை கழற்றி, அந்த பெண்ணின் முன் அரை நிர்வாணமாக நின்றார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டார். உடனே, ஹேமராஜ் அப்பெண்ணை சரமாரியாக தாக்கினார். கர்ப்பிணி என்றும் பாராமல், அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். தப்பிக்க அப்பெண் போராடினார்.குடியாத்தம் -- கே.வி.குப்பம் ஸ்டேஷன் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த ஹேமராஜ், பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். பலத்த காயம்
ரயில் காட்பாடி சென்றவுடன் ஹேமராஜ், ரயிலில் இருந்து இறங்கி தப்பினார். ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு கை, கால் முறிந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.வலி தாங்க முடியாமல் அப்பெண் அலறியதை கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, ஜோலார்பேட்டை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த கர்ப்பிணியை மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்சில் வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.ரயில்வே போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து, ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி ஸ்டேஷனில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, ஹேமராஜை நேற்று அதிகாலை அவரது வீட்டின் அருகே பிடித்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் கைதானவர்
ஹேமராஜ், 2022ல் சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம், மொபைல்போன், செயினை பறித்து காட்பாடி அருகே வந்தவுடன் அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்திற்காக அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின், 2023ல் சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை காட்பாடி அழைத்து வந்து, நகையை பறித்து, கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினார். அதற்காக, போலீசில் சிக்கி சிறை சென்றார். அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், தற்போது மீண்டும் ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து சிக்கியுள்ளார். இவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவருடன் வந்ததாக கூறப்படும் தப்பிய மற்றொரு வாலிபர் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.