கார் வாங்கி தராத தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
விரிஞ்சிபுரம்: கார் வாங்கி தராத ஆத்திரத்தில், தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், அன்பூண்டியை சேர்ந்தவர் ரவி, 60; இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா. மகன் இளையராஜா, 36; கார் ஓட்டுநர். டிச., 16 இரவு, ரவி வேலை செய்யும் இடத்துக்கு சென்ற இளையராஜா, புதிதாக கார் வாங்குவதற்காக, 4 லட்சம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். ரவி, தன்னிடம் பணம் இல்லை என, கூறியுள்ளார். இதில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இளையராஜா, ரவியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ரவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிசிச்சை பலனின்றி, ரவி நேற்று உயிரிழந்தார். விரிஞ்சிபுரம் போலீசார், இளையராஜாவை கைது செய்தனர்.