நலிவடைந்த கயிறு திரிக்கும் தொழில் மீட்டெடுக்கப்படுமா?
காட்பாடி:'நலிவடைந்து வரும் பாரம்பரிய கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு, மானியம், தொழிற்கடன் வழங்கினால், தொழிலை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்' என, கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே கிளித்தான் பட்டறையில் பாரம்பரிய தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு தலைமுறை குடியாத்தம், தேங்காய் நிறுவனங்களிலிருந்து தேங்காய் நார் வாங்கி, கயிறு திரிக்கும் தொழிலை, பாரம்பரியமாக நான்கு தலைமுறைக்கும் மேலாக தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். தொழிலை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ மாவட்ட நிர்வாகம் மானியம், தொழிற்கடன் உள்ளிட் டவையை சரிவர வழங்குவதில்லை என, பாரம்பரிய கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வட்டியின்றி கடன் இதுகுறித்து, கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கயிறுகளால் பாரம்பரிய கயிறு திரிக்கும் தொழில் நலிவடைந்துள்ளது. எங்களுக்கு இந்த தொழிலை விட்டால், வேறு வேலை தெரியாது. ஆண்களுக்கு, 350 ரூபாயும், பெண்களுக்கு, 200 ரூபாயும் கூலி கிடைக்கிறது. இங்கு மூன்று ஆண்டுகளில் தயாரிக்கப்படும் கயிறுகள், சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் தயாரிக்கப்படுகிறது. மிகப்பெரிய இயந்திரங்கள் மூலம் அங்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. நடைமுறையில் தொழில் கடன் பெறுவதில் எளிய வசதி இல்லை. ஒரு குடும்பமே கயிறு திரித்து சம்பாதிப்பதை, வேறு வேலை பார்ப்பவர்கள் ஒரே ஆளாக சம்பாதிக்கின்றனர். இதனால் அடுத்த தலைமுறையில் பாரம்பரிய கயிறு திரிக்கும் தொழில், மறையும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பாரம்பரிய கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு, மானியத்துடன், தொழிற்கடனை வட்டியின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.